தேசிய செய்திகள்

டெல்லியில் கொரோனா பாதித்த எய்ம்ஸ் மருத்துவரின் கர்ப்பிணி மனைவிக்கும் வைரஸ் பாதிப்பு

டெல்லியில் கொரோனா பாதித்த எய்ம்ஸ் மருத்துவரின் கர்ப்பிணி மனைவிக்கும் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருபவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனை அடுத்து அவர் புதிய தனி வார்டு ஒன்றுக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு பல்வேறு பரிசோதனைகள் நடத்தப்பட்டன.

அவசரகால பணிக்காக மருத்துவரின் மனைவி பணியில் அமர்த்தப்பட்டு உள்ளார். 9 மாத கர்ப்பிணியான அவருக்கும் பரிசோதனையில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் அவரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். அவருக்கு எய்ம்ஸ் மருத்துவமனையிலேயே பிரசவம் நடக்கும் என்று கூறப்பட்டு உள்ளது.

அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கடைப்பிடித்து பிரசவம் மேற்கொள்ளப்படும். மருத்துவர்கள் முறையான சிகிச்சைகளை வழங்குவார்கள். அனைத்து மருத்துவ உபகரணங்களும் பாதிப்பு நீக்கப்படும் என எய்ம்ஸ் மருத்துவமனை அதிகாரிகள் கூறியுள்ளனர். கொரோனா சிகிச்சைக்காக பணியாற்றிய மருத்துவருடன் அவசரகால பணிக்காக சேர்ந்த அவரது கர்ப்பிணி மனைவிக்கும் வைரஸ் பாதித்து உள்ளது எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றி வருபவர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.