தேசிய செய்திகள்

தலைமை நீதிபதிக்கு எதிராக பொதுநல மனு மூத்த வக்கீல் சாந்தி பூ‌ஷண் தாக்கல் செய்தார்

சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகளை ஒதுக்குவதில் பாரபட்சமாக செயல்படுவதாக தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது 4 மூத்த நீதிபதிகள் கடந்த ஜனவரி மாதம் குற்றம் சாட்டினர்.

புதுடெல்லி,

தலைமை நீதிபதிக்கு எதிராக மூத்த வக்கீலும், முன்னாள் மத்திய சட்ட மந்திரியுமான சாந்தி பூஷண் இதே குற்றச்சாட்டுடன் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.

மனுவில், அவர் கூறி இருப்பதாவது:

அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை, தனக்கு வேண்டிய அமர்விடமே தலைமை நீதிபதி ஒப்படைக்கிறார். அவரும், சுப்ரீம் கோர்ட்டு பதிவாளரும் தங்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகின்றனர்.

நீதிபதிகள் கொண்ட அமர்வை அமைக்க தலைமை நீதிபதிக்கு தன்னிச்சையான அதிகாரம் கிடையாது. அவர் மூத்த நீதிபதிகளுடன் ஆலோசித்துதான் அதை செய்ய வேண்டும்.

அவர் தன்னிச்சையாக, சுப்ரீம் கோர்ட்டு விதிமுறைகளுக்கு மாறாக செயல்பட தடை விதிக்க வேண்டும். அமர்வுகளை அமைக்க 5 நீதிபதிகளைக் கொண்ட கொலிஜியத்துக்கு அதிகாரம் அளிக்கப்பட வேண்டும். அமர்வுகளுக்கு வழக்குகளை ஒதுக்குவது குறித்த கொள்கை, கோட்பாடுகளை வகுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.