புதுடெல்லி
ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
ஈரானின் பாதுகாப்பு மந்திரி அமீர் நசீர்ஜடே மற்றும் புரட்சிகர காவல்படை தளபதி முகமது பாக்பூர் உள்ளிட்ட பல முக்கிய அதிகாரிகள், தலைவர்கள், தளபதிகள் கொல்லப்பட்டனர். ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, அவருடைய மனைவி, மகள், மருமகன் உள்ளிட்ட குடும்பத்தினரும் கொல்லப்பட்டு உள்ளனர். இதனை ஈரான் நாடும் உறுதி செய்துள்ளது. இதனால் மேற்காசிய பகுதியில் கடும் பதற்ற நிலை காணப்படுகிறது.
இதனை தொடர்ந்து ஈரான் நடத்தி வரும் பதிலடி தாக்குதல்களால் இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் அவற்றின் படை தளங்கள் அமைந்த வளைகுடா நாடுகள் பாதிக்கப்பட்டு உள்ளன. இதனால், வான், கடல் வழி போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. பல்வேறு நாடுகளிலும் எரிபொருள் பற்றாக்குறை, விலைவாசி உயர்வு உள்ளிட்ட சிக்கல்கள் எழுந்துள்ளன.
மேற்காசிய மோதல், பதற்றம் நிறைந்த சூழலில், டெல்லியில் பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், ஜே.பி. நட்டா, சிவராஜ் சிங் சவுகான் உள்ளிட்டோர் தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது. பெட்ரோல், கச்சா எண்ணெய், எரிவாயு, மின்சாரம் மற்றும் உரம் உள்ளிட்ட துறைகளில் நிலைமையை பற்றி ஆய்வு செய்வதற்காக இந்த கூட்டம் நடைபெறுகிறது என கூறப்படுகிறது.
இதில், நாடு முழுவதும் தடையற்ற விநியோகம், பொருட்கள் கையிருப்பு மற்றும் திறம்பட விநியோகித்தல் ஆகியவற்றை உறுதி செய்வதில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்ற வகையில் ஆலோசனை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.