கோப்பு படம் (பிடிஐ) 
தேசிய செய்திகள்

பிரதமர் மோடியை இன்று சந்திக்கிறார் மே.வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி

கலைகுன்டா விமானப்படை விமான நிலையத்திற்கு வரும் பிரதமர் மோடியை மம்தா பானர்ஜி சந்திக்க உள்ளார்.

கொல்கத்தா,

வங்கக்கடலில் உருவான யாஸ் புயல் நேற்று முன்தினம் காலையில், ஒடிசா மாநிலம் பாத்ரக் மாவட்டம் தாம்ரா துறைமுகம் அருகே கரையை கடந்தது. அப்போது, ஒடிசா மாநிலத்திலும், மேற்கு வங்காளத்திலும் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. புயலுக்கு 4 பேர் பலியானார்கள். ராணுவம், தேசிய பேரிடர் மீட்புப்படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தநிலையில், புயல் சேத பகுதிகளை பிரதமர் மோடி இன்று (வெள்ளிக்கிழமை) பார்வையிடுகிறார்.

முதலில் ஒடிசாவுக்கு செல்லும் அவர், தலைநகர் புவனேஸ்வரில் ஆய்வுக்கூட்டம் நடத்துகிறார். அதன்பிறகு, பாதிக்கப்பட்ட பாத்ரக், பாலசோர், புர்பா மெதினிபூர் ஆகிய மாவட்டங்களில் புயல் சேத பகுதிகளை ஹெலிகாப்டரில் பறந்து பார்வையிடுகிறார்.

அதைத்தொடர்ந்து, பிரதமர் மோடி மேற்கு வங்காளத்துக்கு செல்கிறார். கலைகுன்டா விமானப்படை விமான நிலையத்திற்கு வரும் பிரதமர் மோடியை மம்தா பானர்ஜி சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பின் போது யாஸ் புயலால் ஏற்பட்ட சேதம் குறித்து இருவரும் விவாதிக்கக் கூடும் எனத்தெரிகிறது. பின்னர் இருவரும் தனித்தனியே யாஸ் புயல் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய உள்ளனர்.