மும்பை,
கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் மின்சார ரெயில் சேவை நிறுத்தப்பட்டது. அதன்பிறகு அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் மின்சார ரெயில் இயக்கப்பட்டது. இந்தநிலையில் கடந்த மாதம் மத்திய, மேற்கு ரெயில்வே 100 சதவீதம் மின்சார ரெயில் சேவையை தொடங்கியது.
தற்போது 2 டோஸ் தடுப்பூசி போட்ட அனைவரும் மின்சார ரெயில்களில் அனுமதிக்கப்படுகின்றனர். இதில் மேற்கு ரெயில்வேயில் விரார், போரிவிலி - சர்ச்கேட் இடையே தினந்தோறும் 12 ஏ.சி. மின்சார ரெயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மேற்கு ரெயில்வேயில் கூடுதலாக மேலும் 8 ஏ.சி. மின்சார ரெயில் சேவைகள் இயக்கப்பட உள்ளது.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், பயணிகளின் வசதிக்காக வரும் 22-ந் தேதி முதல் கூடுதலாக மேலும் 8 புதிய ஏ.சி. மின்சார ரெயில் சேவைகள் இயக்கப்பட உள்ளது. இதன் மூலம் ஏ.சி. மின்சார ரெயில் சேவை 20 ஆக அதிகரிக்கும் என்றார். மும்பையில் தற்போது மத்திய ரெயில்வே வழித்தில் 26 ஏ.சி. மின்சார ரெயில் சேவைகள் இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.