புதுடெல்லி
இந்தியாவில் பரவலாகக் காணப்படும் உருமாறிய கொரோனா வைரஸ் உலகளவில் 44 நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று வேகமாகப் பரவுவதற்கு முக்கியக் காரணம் பி.1.617 எனும் உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ்தான். கடந்த அக்டோபர் மாதம் முதன்முதலில் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த வைரஸ்தான் தற்போது உலக சுகாதார அமைப்பின் 6 மண்டலங்களில் உள்ள 44 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை 4,500 மாதிரிகளில் கண்டறியப்பட்டதாக உலக சுகாதார அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தியாவைத் தவிர்த்து இந்தியாவில் உள்ள பி.1.617 உருமாறிய வைரஸ் பிரிட்டனில்தான் அதிகமாகக் கண்டறியப்பட்டுள்ளது என உலக சுகாதார அமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் பி.1.617 மரபணு மாற்ற கொரோனா வைரஸ் இந்திய மரபியல் மாற்ற வைரஸ் என்று ஊடகங்களில் வெளியான தகவலை மத்திய சுகாதாரத்துறை மறுத்துள்ளது.
இந்த வைரஸ் இந்திய வைரசாகும் என உலக சுகாதார நிறுவனம் எங்கும் கூறவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் உலகம் முழுதும் பரவக்கூடியது என்றும் மிகவும் கவலைக்குரியது என்றும் வெளியான செய்திகளும் மத்திய அரசால் மறுக்கப்பட்டுள்ளது.
இந்த ஊடக செய்திகளுக்கு எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.