புதுடெல்லி,
ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமை அலுவலக விருந்தினர் இல்லத்தில் காவலில் வைக்கப்பட்டு இருக்கும் ப.சிதம்பரத்தை அவரது மனைவி நளினி, மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் நேற்று மாலை சந்தித்து பேசினார்கள்.
சந்திப்பு முடிந்து வெளியே வந்த கார்த்தி சிதம்பரம் நிருபர்களிடம் கூறுகையில், கோர்ட்டு வழக்கு விசாரணை குறித்து தாங்கள் ஆலோசனை நடத்தியதாகவும், தனது தந்தை உற்சாகத்துடன் இருப்பதாகவும் தெரிவித்தார். தனது தந்தை படிக்க புத்தகம் கேட்டதாகவும், அதை கொண்டு வந்து கொடுத்ததாகவும் கூறினார். அப்போது, ஊழல் செய்தவர்கள் யாரும் தப்பிக்க முடியாது என்று பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பிரதமர் மோடி கூறி இருக்கிறாரே? என்று அவரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள்.
அதற்கு கார்த்தி சிதம்பரம் பதில் அளிக்கையில், அது சரிதான். ஊழல் செய்த யாரும் தப்பிக்கக்கூடாது என்று கூறியதோடு, நானோ, எனது தந்தையோ ஊழல் செய்யாததால் நாங்கள் குற்றமற்றவர்கள் என்பது நிரூபணம் ஆகும் என்றும் தெரிவித்தார்.