ஜெய்ப்பூர்,
ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கர் மாவட்டம் தம்லவ் கிராமத்தை சேர்ந்தவர் மோகன் (வயது 45). இவரது மனைவி லட்பாய். இதனிடையே, கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு நிலவி வந்தது.
இந்நிலையில், லட்பாய்க்கும் அவரது கணவருக்கும் இடையே நேற்று இரவு மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த லட்பாய் வீட்டில் இருந்த கோடாரியால் கணவர் மோகனை சரமாரியாக வெட்டியுள்ளார்.இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த மோகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதையடுத்து, கிராமத்தில் உள்ள கிணற்றில் குதித்து லட்பாயும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை தொடர்ந்து கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற லட்பாயை கிராமத்தினர் மீட்டு அவரை அருகில் உள்ள மருத்துவனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து இன்று காலை அறிந்த போலீசார், விரைந்து சென்று மோகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.