தேசிய செய்திகள்

காட்டு விலங்குகளின் தாக்குதல்: சேதம் அடைந்த பயிர்களுக்கும் இழப்பீடு - மத்திய மந்திரி தகவல்

காட்டு விலங்குகளின் தாக்குதலால் சேதம் அடைந்த பயிர்களுக்கும் இழப்பீடு வழங்க உள்ளதாக மத்திய மந்திரி தகவல் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

இயற்கை சீற்றங்களால் சேதம் அடையும் பயிர்களுக்கு பிரதம மந்திரி பசல் பீமா யோஜனா என்ற மத்திய அரசு திட்டத்தின்கீழ் இழப்பீடு வழங்கப்பட்டு வருகிறது. காட்டு விலங்குகள் தாக்குதலால் சேதம் அடையும் பயிர்களையும் இதில் சேர்க்க வேண்டும் என்று பல்வேறு எம்.பி.க்கள் வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில், காட்டு விலங்குகள் தாக்குதலால் சேதம் அடையும் பயிர்களுக்கும் இத்திட்டத்தின்கீழ் இழப்பீடு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. முதல்கட்டமாக, ஒன்றிரண்டு மாவட்டங்களில் சோதனை அடிப்படையில் இது அமல்படுத்தப்படும் என்று மத்திய வேளாண் மந்திரி ராதா மோகன்சிங் கூறினார். சில தோட்டக்கலை பயிர்களையும் சோதனை அடிப்படையில் இத்திட்டவரம்புக்குள் கொண்டு வந்திருப்பதாகவும் அவர் கூறினார்.