தேசிய செய்திகள்

பெட்ரோலில் 20 சதவீத எத்தனால் கலப்பால் வாகன என்ஜின் சேதமடையுமா? - மத்திய அரசு விளக்கம்

ஒரு லிட்டர் எத்தனால் தயாரிப்புக்கு 3 முதல் 5 லிட்டர் பதப்படுத்தப்பட்ட தண்ணீர்தான் பயன்படுத்தப்படுகிறது.

புதுடெல்லி,

பெட்ரோலில் 20 சதவீத எத்தனால் கலப்பதால் வாகன என்ஜின் சேதமடையுமா என்பது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பெட்ரோலில் 20 சதவீதம் வரை எத்தனால் கலக்கப்படுவது. அறிவியல் ஆய்வுகள், சர்வதேச அனுபவம் ஆகியவை அடிப்படையிலானது. ஒரு லிட்டர் எத்தனால் தயாரிக்க 10 ஆயிரம் லிட்டர் தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது என்று கூறப்படுவது தவறு. தேசிய உணவு பாதுகாப்பு திட்ட தேவையை பூர்த்தி செய்த பிறகு உபரியாக உள்ள அரிசிதான், எத்தனால் உற்பத்திக்கு திருப்பிவிடப்படுகிறது. ஒரு லிட்டர் எத்தனால் தயாரிப்புக்கு 3 முதல் 5 லிட்டர் பதப்படுத்தப்பட்ட தண்ணீர்தான் பயன்படுத்தப்படுகிறது. அந்த தண்ணீரும் மறுசுழற்சி செய்து பயன்படுத்தப்படுகிறது.

சோளம்

எத்தனாலில் 40 சதவீதத்துக்கு மேல். சோளத்தின் பங்களிப்பு இருக்கிறது. சோளத்தின் நீர்ப்பாசனத்துக்கு அரிசிக்கு தேவையானதை விட குறைவாகவே தண்ணீர் தேவைப்படும். எத்தனால், சோதிக்கப்படாத எரிபொருள் என்று கூறப்படுவது தவறு. பத்தாண்டுகளாக சர்வதேச அளவில் எத்தனால் பயன்படுத்தப்படுகிறது. வாகன திறனை எவ்விதத்திலும் பாதிக்காது. கார்களில் 40 ஆயிரம் கி.மீட்டரும். இருசக்கர வாகனங்களில் 20 ஆயிரம் கி.மீட்டரும் இயக்கி பரிசோதிக்கப்பட்டது. ஆனால் என்ஜினுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. பழைய வாகனங்களில் சில ரப்பர் பாகங்கள் மட்டுமே சீக்கிரமே மாற்ற வேண்டி இருக்கும். மைலேஜில் சிறிதளவு மாற்றமே காணப்பட்டது.

காப்பீடு

வாகனத்தின் வாரண்டி மற்றும் காப்பீட்டு கோரிக்கை நிராகரிக்கப்படும் என்று கூறப்படுவதும் தவறான தகவல். இதை காப்பீட்டு நிறுவனங்களும், வாகன உற்பத்தி நிறுவனங்களும் உறுதி செய்துள்ளன. எத்தனாலில் சர்க்கரை எதுவும் இல்லை. எனவே, தேனீக்கள் மொய்க்காது. எரிபொருள் டேங்கில் தண்ணீர் ஊடுருவுவதை அனுமதிக்காது. மேலும், எத்தனால் உற்பத்தி ஆலைகள் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாது. 20 சதவீத எத்தனால் கலப்பால் ரூ.1 லட்சத்து 90 ஆயிரம் கோடி அன்னிய செலாவணி சேமிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.