புதுடெல்லி,
நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாள்தோறும் தொடர்ந்து உச்சமடைந்து வருகிறது. இது உலக நாடுகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. சமீப நாட்களாக 3 லட்சத்திற்கும் கூடுதலான எண்ணிக்கையில் பாதிப்புகள் பதிவாகி வருகின்றன.
இதனால், மக்களிடையே அச்ச உணர்வு ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில், மத்திய நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் வி.கே. பால் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசும்பொழுது, தேவையில்லாமல் யாரும் வெளியே செல்ல வேண்டாம். கொரோனா பாதிப்புக்கு ஆளானவர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். அவர்கள் வீட்டில் மற்ற உறுப்பினர்களுடன் ஒன்றாக அமர்ந்திருக்கும் சூழலில் மற்றவர்களும் கூட முக கவசம் அணிவது அவசியம் என்று கூறினார்.
இதேபோன்று, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டில் தனி அறையில் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். அவசரகால சூழலில், கொரோனா தடுப்பூசிகளை போடும் வேகம் சரிந்து விட நாம் விட்டுவிட கூடாது. உண்மையில், தடுப்பூசி போடுவது தீவிரப்படுத்தப்பட வேண்டும் என கூறியுள்ளார்.
தொடர்ந்து அவரிடம், பெண்கள் தங்களுடைய மாதவிடாய் காலத்தில் கொரோனா தடுப்பூசிகளை எடுத்து கொள்வது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த அவர், ஆம். மாதவிடாய் காலத்திலும் கூட கொரோனா தடுப்பூசிகளை எடுத்து கொள்ளலாம். தடுப்பூசி போடுவது தள்ளிப்போடப்பட கூடாது என கூறிய அவர், தொலைதூர மருத்துவ சேவைகளை ஊக்கப்படுத்த வேண்டும் என்று மருத்துவமனைகள் மற்றும் மருத்துவர்களை அவர் கேட்டு கொண்டார்.