தேசிய செய்திகள்

பராமரிக்கப்படாத பொது கழிவறையால் பெண்கள் அவதி

ஆண்டர்சன்பேட்டையில் உள்ள பொது கழிவறை பராமரிக்கப்படாமல் உள்ளதால் அப்பகுதி பெண்கள் கழிவறையை பயன்படுத்த முடியாமல் அவதி அடைந்து வருகிறார்கள்.

கோலார் தங்கவயல்:

ஆஸ்ரயா திட்டத்தின் கீழ் வீடுகள்

கோலார் மாவட்டம் தங்கவயல் தாலுகா ஆண்டர்சன்பேட்டை 2-வது பிளாக் பகுதியில் ஏரிக்கரை ஓரத்தில் குடிசைப்பகுதி அமைந்துள்ளது. மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ. பக்தவச்சலம் தனது பதவிக்காலத்தில் இப்பகுதியை சேர்ந்த மக்களுக்கு ஆஸ்ரயா திட்டத்தின் கீழ் வீடுகளை கட்டிக்கொடுத்தார்.

பின்னர் பொது கழிவறையும் கட்டிக்கொடுத்தார். தற்போது இந்த கழிவறை முறையாக பராமரிப்பு இல்லாமல் அலங்கோலமாக காட்சி அளிக்கிறது. பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

பெண்கள் அவதி

பெரும்பாலான வீடுகளில் கழிவறை வசதி இல்லாததால் அவர்கள் பொது கழிவறையையே நம்பி உள்ளனர். இந்த கழிவறை பராமரிக்கப்படாமல் இருப்பதால் பெண்கள் அதை பயன்படுத்த முடியாமல் அவதி அடைகின்றனர்.

எனவே நகரசபை நிர்வாகம் அந்த பொது கழிவறையை புனரமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் அவர்கள் தங்கள் வார்டு கவுன்சிலர் கவுன்சிலர் ஜெயலட்சுமி இதுவரை தங்களை நேரில் வந்து சந்தித்து தங்களது குறைகளை கேட்டறிய வில்லை என்று குற்றச்சாட்டு கூறுகிறார்கள்.

மக்கள் எதிர்பார்ப்பு

மேலும் சாக்கடை கால்வாய் வசதி, தெரு மின்விளக்குகள் அமைத்து தர வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து நகரசபை நிர்வாகத்தினரும், வார்டு கவுன்சிலரும் கவனத்தில் கொண்டு தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டும் என்றும் அவர்கள் எதிர்ப்பார்த்து உள்ளனர்.