புதுடெல்லி,
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா எனப்படும் எஸ்.பி.ஐ வங்கி , மூன்று மாதத்திற்கு மேலான கர்ப்பிணி பெண்கள் வேலையில் சேர்வதற்கு தற்காலிக தகுதியற்றவர்கள் என சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் 31-ந்தேதி வெளியிடப்பட்ட புதிய மருத்துவ தகுதி விதிமுறையில், மூன்று மாதத்திற்கு மேலான கர்ப்பிணி பெண்கள் பணிக்கு சேரும் தகுதி பெற்றிருந்தாலும் அவர்களை தற்காலிகமாக தகுதியற்றவர்கள் எனக்கருத வேண்டும். தேர்வு ஆனவுடன் அவர்களுக்கு பணி வழங்குவதை தவிர்க்க வேண்டும். குழந்தை பெற்ற பிறகு 4 மாதங்கள் கழித்து அந்த பெண்களுக்கு பணி வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு 6 மாதங்களுக்கு மேலான கர்ப்பிணிகளுக்கு மட்டுமே இத்தகைய விதிகள் பின்பற்றப்பட்டு வந்த நிலையில், தற்போது 3 மாதங்கள் ஆன கர்ப்பிணிகளுக்கே நடைமுறைப்படுத்தும் புதிய உத்தரவுக்கு எதிர்ப்பு எழுந்துள்ளன.
எஸ்.பி.ஐ வங்கியின் இந்த உத்தரவானது, பாரபட்சமானது. சட்டத்திற்கு புறம்பானது. சட்டம் வழங்கும் மகப்பேறு சலுகைகள் பாதிக்கும் வகையில் உள்ளது என டெல்லி மகளிர் ஆணையம் தலைவர் ஸ்வாதி மலிவால் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். மேலும், பெண்களுக்கு எதிரான இந்த விதியை திரும்பப்பெறுமாறு டெல்லி மகளிர் ஆணையம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.