தேசிய செய்திகள்

13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 53 ஆண்டுகள் சிறை

வழக்கு விசாரணை நாதாபுரம் போக்சோ விரைவு கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

கோழிக்கோடு,

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் நொச்சாடு முளியங்கள் பகுதியை சேர்ந்தவர் முகமது ரைகான் (வயது 41). தொழிலாளி. இவர், கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் விபத்தில் படுகாயம் அடைந்து வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார்.

அப்போது ஒரு வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, அங்கு தனியாக இருந்த 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பேராம்பிரா போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, முகமது ரைகானை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை நாதாபுரம் போக்சோ விரைவு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் 13 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்தநிலையில் சிறுமியை பலாத்காரம் செய்த முகமது ரைகானுக்கு 53 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.2.10 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி தேவன் கே.மேனன் தீர்ப்பளித்தார்.