புதுடெல்லி,
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் அரசில் மந்திரியாக இருந்தவர் கபில் மிஸ்ரா. அவர் சமீபத்தில் மந்திரி பதவியில் இருந்தும், ஆம் ஆத்மி கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டார்.
அதையடுத்து, அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு மந்திரியிடம் ரூ.2 கோடி லஞ்சம் வாங்கியதை நேரில் பார்த்ததாக குற்றச்சாட்டு தெரிவித்தார். ஆம் ஆத்மிக்கு எதிராக 6 நாட்கள் உண்ணாவிரத போராட்டமும் நடத்தினார். இந்நிலையில், கபில் மிஸ்ரா நேற்று புதிய குற்றச்சாட்டு ஒன்றை தெரிவித்தார். 2014ம் ஆண்டு பிப்ரவரி மாதம், ஆம் ஆத்மி கட்சி முதல்முறையாக ஆட்சியில் இருந்தபோது, உயர் பாதுகாப்பு வாகன நம்பர் பிளேட் தயாரிப்பதற்காக சில நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டது. அதில், ரூ.400 கோடி ஊழல் நடந்தது தெரியவந்தது. அதுபற்றி லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.
ரூ.400 கோடி முறைகேட்டில் சிக்கிய ஊழல்வாதியின் பணத்தில் ஆம் ஆத்மி தலைவர்கள் 2 பேர் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டதாக கபில் மிஸ்ரா குற்றம் சாட்டினார். இதற்கிடையே, அவரது குற்றச்சாட்டை டெல்லி அரசின் செய்தித்தொடர்பாளர் நாகேந்தர் சர்மா மறுத்தார். டுவிட்டர் பக்கத்தில் அவர் கூறுகையில், கபில் மிஸ்ரா தவறான தகவல்களை அளிக்கிறார். தான் என்ன பேசுகிறோம் என்று தெரியாமலே பேசுகிறார். இந்த ஊழல் பற்றி ஆம் ஆத்மி அரசுதான் விசாரணைக்கு உத்தரவிட்டது என்றார்.
கபில் மிஸ்ராவின் தொடர் குற்றச்சாட்டு விவகாரத்தில் மவுனம் கலைத்து உள்ள டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால்,
கபில் மிஸ்ராவின் குற்றச்சாட்டுகளில் உண்மை இருந்து இருந்தால் நான் இப்போது சிறையில் இருந்து இருப்பேன் என கூறிஉள்ளார். அவருடைய குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் அடிப்படையற்றது, எதிரிகள் கூட அவருடைய குற்றச்சாட்டை நம்பவில்லை என கூறிஉள்ளார் அரவிந்த் கெஜ்ரிவால்.