புதுடெல்லி,
உலக சுகாதார அமைப்பு தனது வலைதளத்தில் வெளியிட்டுள்ள தவறான இந்திய வரைபடத்திற்கு நாடாளுமன்றத்தின் மக்களவையில் இன்று விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. இதுபற்றி மத்திய உள்விவகார அமைச்சகத்தின் இணை மந்திரி பேசும்பொழுது, உலக சுகாதார அமைப்பின் வலைதளத்தில் வெளியான தவறான இந்திய வரைபடத்திற்கு உயர்மட்ட அளவில் இந்தியா சார்பில் அந்த அமைப்பிடம் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுபற்றி ஜெனீவாவில் உள்ள இந்திய நிரந்தர தூதரகத்தில் உலக சுகாதார அமைப்பு பதிலளித்து உள்ளது. அதில், இந்திய வரைபடம் பற்றி வலைதளத்தில் விளக்கம் வெளியிடப்பட்டு உள்ளது.
வெளியான வரைபட விவரங்கள், எந்தவொரு நாட்டையோ, எல்லைகளையோ அல்லது பகுதியையோ சட்டப்பூர்வ முறையில் குறிப்பன அல்ல. அந்த நாட்டின் அதிகாரிகள் அல்லது சட்டப்பூர்வ அந்தஸ்து ஆகியவற்றையும் அவை குறிக்கவில்லை.
இந்த வரைபட விவரங்கள் உலக சுகாதார அமைப்பின் சார்பிலான வெளிப்படுத்துதலும் அல்ல. அந்நாடுகளின் எல்லைகளை குறைத்து காட்டும் அர்த்தமும் இல்லை. புள்ளிகளால் அல்லது கோடுகளால் வரைபடத்தில் காட்டப்பட்டவை தோராய எல்லை கோடுகள். இந்த கோடுகள் நாடுகளின் முழு ஒப்பந்தத்திற்கு உட்பட்ட எல்லை பகுதிகளாக இல்லாமலும் இருக்கலாம் என அந்த அமைப்பின் வலைதளத்தில் விளக்கம் வெளியிடப்பட்டு உள்ளது என நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதுதவிர, எல்லைகளை சரியாக வெளிப்படுத்தும் வகையில் வரைபடங்களை வெளியிட வேண்டும் என்று இந்திய அரசின் நிலைப்பாடு உலக சுகாதார அமைப்பிடம் வலியுறுத்தப்பட்டு உள்ளது என்று நாடாளுமன்ற மக்களவையில் மத்திய உள்விவகார அமைச்சக இணை மந்திரி தெரிவித்து உள்ளார்.