புதுடெல்லி,
தேர்தல் கமிஷன் சிபாரிசை ஏற்று, 20 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்தார்.
இதற்கு பா.ஜனதா அதிருப்தி தலைவர்களும், முன்னாள் மத்திய மந்திரிகளுமான யஷ்வந்த் சின்கா, நடிகர் சத்ருகன் சின்கா ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இருவரும் பிரதமர் மோடியை பகிரங்கமாக விமர்சித்து வருபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
யஷ்வந்த் சின்கா, தனது டுவிட்டர் பக்கத்தில், ஜனாதிபதி உத்தரவு, இயற்கை நீதியை முற்றிலும் கருவறுத்து விட்டது. எந்த விசாரணையும் இல்லை, ஐகோர்ட்டு உத்தரவுக்காக காத்திருக்கவும் இல்லை. இது, துக்ளக்தனமான மோசமான உத்தரவு என்று கூறியுள்ளார்.
சத்ருகன் சின்கா தனது டுவிட்டர் பக்கத்தில், பழிவாங்கும் அரசியல் நீண்ட காலம் நீடிக்காது. கவலைப்படாதீர்கள். மகிழ்ச்சியாக இருங்கள். நீங்கள் கடவுளின் நீதியை விரைவில் பெற வேண்டுகிறேன். வாய்மையே வெல்லும். ஜெய்ஹிந்த் என்று கூறியுள்ளார்.