புதுடெல்லி,
டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பஞ்சாப் பிரிவினைவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் நிர்வாகியும் கவிஞருமான குமார் விஸ்வாஸ் குற்றம் சாட்டியிருந்தார். இந்த விவகாரம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள பஞ்சாப் அரசியலில் விவாதப் பொருளானது.
காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளும் கெஜ்ரிவாலை இவ்விவகாரத்தில் கடுமையாக சாடின. எனினும், இது குறித்துப் பேசிய கெஜ்ரிவால், தனக்கு எதிரான குற்றச்சாட்டு நகைப்பூட்டுவதாகவும், ஊழல்வாதிகள் ஒருசேர கை கோர்த்து இருப்பதாகவும் பதிலடி கொடுத்து இருந்தார்.
இந்த நிலையில், டெல்லியில் உள்ள கெஜ்ரிவால் இல்லம் முன்பாக இன்று இளைஞர் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார், தடுப்புகளை கொண்டு தடுத்தனர். பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஸ்ரீனிவாஸ் பிவி, தேர்தலில் காலிஸ்தான் பிரிவினைவாதிகளிடம் இருந்து கெஜ்ரிவாலுக்கு ஆதரவு கிடைத்ததா? என்ற குற்றச்சாட்டுக்கு கெஜ்ரிவால் நிச்சயம் பதிலளிக்க வேண்டும் என்றார்.
பஞ்சாபில் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும் பிரதான எதிர்க்கட்சியாக உள்ள பாஜகவுக்கும் ஆம் ஆத்மி இந்த முறை கடும் சவால் அளிக்கும் எனத்தெரிகிறது.