புதுடெல்லி,
மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர் ஜாகிர் நாயக். மதபோதகரான இவர், தனது சர்ச்சைக்குரிய கருத்துகளால் பிரபலமானார். இவர் மீது தேசிய புலனாய்வு முகமை ஏற்கனவே வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
ஜாகிர் நாயக், தன் மீதான வழக்குகளை தள்ளுபடி செய்யுமாறும், ரத்து செய்யப்பட்ட பாஸ்போர்ட் போன்றவற்றை மீண்டும் அளிக்க உத்தரவிடுமாறும் மும்பை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். அதன் மீதான விசாரணை நடந்து வருகிறது.
இந்த நிலையில் தற்போது மும்பை மற்றும் புனேவில் உள்ள ஜாகிர் நாயக்கிற்கு சொந்தமான ரூ.16 கோடியே 40 லட்சம் மதிப்புள்ள சொத்துகளை முடக்கி வைத்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்து உள்ளது. மேலும் பணமோசடி வழக்கில் ஜாகிர் நாயக்கின் சொத்துகளை ஏற்கனவே 2 முறை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.
இவ்வாறு இதுவரை மொத்தம் ரூ.50 கோடியே 49 லட்சம் மதிப்புள்ள சொத்துகள் முடக்கி வைக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறையின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.