செய்திகள்

மணிமுத்தாறு பகுதியில் விளைநிலத்தில் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம் நெற்பயிர்கள் சேதம்

ணிமுத்தாறு பகுதியில் விளைநிலத்தில் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம் செய்தன.

அம்பை,

மணிமுத்தாறு பகுதியில் விளைநிலத்தில் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம் செய்தன. அங்குள்ள நெற்பயிர்களை மிதித்து நாசப்படுத்தியுள்ளது.

காட்டு யானைகள் அட்டகாசம்

நெல்லை மாவட்டம் அம்பை அருகே மணிமுத்தாறு 80 அடி கால்வாய் பகுதி மற்றும் பொட்டல் சீராங்குளம் பகுதி உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையடிவாரம் அமைந்துள்ள இந்த பகுதியில் உள்ள விளை நிலத்துக்குள் காட்டு யானைகள் அவ்வப்போது புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. வனத்துறையினர் வனப்பகுதிக்குள் யானையை விரட்ட முடியாமல் திணறி வருகிறார்கள்.

ஏற்கனவே பருவநிலை மாறியும், தண்ணீர் தேவையை பொறுத்தும் கால தாமதமாக பயிரிடப்பட்டுள்ள பயிர்களை காட்டு யானைகள் சேதப்படுத்துவதை விவசாயிகள் தாங்கி கொள்ள முடியாமல் மனவேதனையில் உள்ளனர்.

நெற்பயிர்கள் சேதம்

இந்தநிலையில் நேற்று காலை விவசாயிகள் தங்களது விளை நிலங்களுக்கு சென்று பார்த்தனர். அப்போது யானையின் கால் தடங்கள் இருந்ததையும், இதனால் நெற்பயிர்களை சேதம் அடைந்திருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். நேற்று முன்தினம் இரவு அந்த பகுதியில் உள்ள விளை நிலங்களுக்குள் காட்டு யானைகள் புகுந்து அங்கிருந்த நெற்பயிர்களை மிதித்து நாசம் செய்துவிட்டு சென்றுள்ளது தெரியவந்தது.

எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும், யானைகளை காட்டுக்குள் விரட்டுவதற்கு வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.