புதுடெல்லி,
இந்தியாவில் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்படுவதை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று ஈரான் நாட்டின் உயர் அதிகாரம் கொண்ட மதத் தலைவர் ஆயத்துல்லா கமேனி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில், 'இந்தியாவில் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டு உலக முஸ்லிம்களின் நெஞ்சம் கவலை கொள்கிறது. முஸ்லிம்கள் படுகொலை செய்யப்படுவதை இந்திய அரசு தடுத்த நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் இஸ்லாமிய உலகத்திலிருந்து இந்தியா தனிமைப்படுத்தப்படும்' என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்திய முஸ்லிம்கள் ஆபத்தில் உள்ளனர் எனப் பொருள்படும் #IndianMuslimsInDanger என்ற ஹேஷ்டேக்கையும் அவர் பதிவிட்டிருக்கிறார். ஆயத்துல்லா கமேனி ஈரானின் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு விவகாரங்களை கவினத்து வருகிறார். டெல்லி வன்முறை குறித்து அவர் ஆங்கிலம், உருது, பாரசீகம், அரபி மொழிகளில் டுவிட் செய்துள்ளார்.
முன்னதாக ஈரான் வெளியுறவு அமைச்சர் ஜவாத் ஷரீப் தனது ட்விட்டர் பதிவில்,'இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளை ஈரான் கண்டிக்கிறது. பல நூற்றாண்டுகளாக இந்தியாவின் நண்பனாக ஈரான் இருக்கிறது. முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையை இந்திய அதிகாரிகள் தடுத்து நிறுத்த வேண்டும். பேச்சுவார்தை மற்றும் சட்டத்தின்படி செயலாற்ற கேட்டுக் கொள்கிறேன்' என்று தெரிவித்திருந்தார். ஈரான் தூதரை நேரில் அழைத்து கண்டனத்தை பதிவு செய்த மத்திய அரசு, இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் ஈரான் தலையிட வேண்டாம் என்று தெரிவித்து இருந்தது.