புதுடெல்லி,
ஒரே நாடு ஒரே மொழி என்ற திட்டத்தை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கடந்த செப்டம்பர் மாதம் வெளிப்படுத்தினார். அது இந்தி பேசாத தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் வீதிகளில் இறங்கி போராடுகிற நிலையை ஏற்படுத்தியது.
இந்தநிலையில் நாடாளுமன்ற மாநிலங்களவையில், ஒரே நாடு, ஒரே மொழி என கொண்டு வர திட்டம் உள்ளதா? என கேள்வி எழுப்பப்பட்டது. இந்த கேள்விக்கு மத்திய உள்துறை ராஜாங்க மந்திரி ஜி.கிஷான் ரெட்டி எழுத்து மூலம் நேற்று பதில் அளித்தார்.
அதில் அவர், ஒரே நாடு, ஒரே மொழி என கொண்டு வரும் திட்டம் இல்லை. நாட்டில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் அரசியல் சாசன சட்டம், சம முக்கியத்துவம் அளித்துள்ளது என கூறி உள்ளார்.
மேலும், மொழி விவகாரம், அரசியல் சாசனப்படி மத்திய அரசு மற்றும் மாநில அரசு என இரண்டு பட்டியலிலும் வரும் எனவும் அதில் அவர் தெரிவித்துள்ளார்.