கோவை,
பொள்ளாச்சியில் நாளை (இன்று) 11 மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. அதில் கலந்து கொள்வதற்காக வந்து உள்ளேன். மேற்குவங்காளத்தில் மத்திய அரசை எதிர்த்து மம்தா பானர்ஜி போராட்டம் நடத்தி வருகிறார்.இதே போன்று தமிழகத்திலும் தர்ணா நடந்திருக்க வேண்டும், ஆனால் நடக்க வில்லை. அவ்வளவு அழுத்தம் மேலிருந்து வருவதை சுயமரியாதை உள்ள எந்த அரசும் ஏற்றுக்கொள்ளாது.
மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்திற்கு பதிலாக பழைய வாக்கு சீட்டு முறையில் தேர்தல் நடத்துவது குறித்து நீங்கள் கேட்கிறீர்கள். நவீனத்தை ஏளனப்படுத்த கூடாது. ஓட்டை உள்ள பக்கெட்டில் தண்ணீர் எடுக்க கூடாது. ஆனால் அதில் ஓட்டை இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
வன விலங்குகளின் இடத்தை நாம் ஆக்கிரமிப்பது பேராசையின் உச்சக்கட்டம். அதற்கான விளைவுகளை நாம் ஏற்று கொள்ளத்தான் வேண்டும். வாழ்வாதாரம் பாதிப்பது என்பது ஒருவிதம். சின்னதம்பி யானையை கும்கியாக மாற்றுவது தொடர்பாக வனத்துறை அமைச்சர் மற்றும் தமிழக அரசு கோர்ட்டில் அளித்த பதில் ஆகியவற்றில் முரண்பாடு உள்ளது. அது அவர்களின் தனி குணாதிசயம். அதில் வியப்பு இல்லை. அவர்கள் இரு நாக்கு உடையவர்கள்.
நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து தற்போது எதுவும் சொல்ல முடியாது. ஆனால் தேர்தலில் கண்டிப்பாக போட்டியிடுவோம். எங்களுக்கு பிரதான கட்சிகள் உள்பட பல்வேறு கட்சிகள் கூட்டணிக்கு அழைப்பு விடுத்துள்ளன. அதை இங்கு விவாதிக்கக்கூடாது. பா.ஜனதா தலைவர்கள் தேர்தலுக்காகத்தான் தமிழகம் வருகிறார்கள். மக்களுக்காக அல்ல. கூட்டணி குறித்து எங்கள் கட்சி நிர்வாகிகள் பல்வேறு கருத்துகளை என்னிடம் கூறியுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.