ராமநகர்,
கர்நாடக துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் நேற்று ராமநகரில் உள்ள ராமதேவர் மலைக்கு வந்து, அங்குள்ள ராமர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
ராமரை நாம் மீண்டும், மீண்டும் நினைத்து பார்க்கிறோம். நிரந்தரமாக அவரை வணங்குகிறோம். இன்னும் எத்தனை ஜென்மங்கள் ஆனாலும், ராமரின் மாண்புகள் நம்மை வழிநடத்திக் கொண்டே இருக்கும். அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி தொடங்கிய சில நாட்களே ஆன நிலையில் ராமகிரிக்கு வந்து சாமி தரிசனம் செய்துள்ளேன். இது முன்காலத்தில் நான் செய்த புண்ணியம்.
மேம்படுத்த நடவடிக்கை
சாதி, மதம் பார்க்காமல் அனைத்து தரப்பினரையும் அரவணைத்து அழைத்து செல்லும் பணியை நான் செய்கிறேன். ராமநகரில் வளர்ச்சி பணிகளை மேற்கொண்டு சாதிக்க வேண்டும் என்பது எனது நோக்கம். இந்த மலையில் ராமர் சீதாவுடன் 5, 6 ஆண்டுகள் தங்கினார். இங்குள்ள சிவலிங்கத்தை ராமரே நிறுவியதாக புராணங்கள் கூறுகின்றன. அதனால் இந்த மலையை அனைத்து ரீதியிலும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அஸ்வத் நாராயண் கூறினார்.
அவர் 400 படிகள் கொண்ட மலையில் நடைபயணமாக ஏறினார். மேலும் அந்த மலையில் நடைபெற வேண்டிய அடிப்படை கட்டமைப்பு பணிகள் குறித்து அவர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.