செய்திகள்

இந்தியாவில் புதிய உச்சம் தொட்ட கொரோனா; கடந்த 24 மணிநேரத்தில் 11,929 பேருக்கு பாதிப்பு

இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் மிக அதிக அளவாக கடந்த 24 மணிநேரத்தில் 11 ஆயிரத்து 929 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் எதிரொலியாக மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிர தடுப்பு மற்றும் பரிசோதனை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்த நிலையில், வைரஸ் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை நாட்டில் தொடர்ந்து அதிகரித்தபடி உள்ளது. இந்நிலையில், மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் கடந்த 24 மணிநேரத்தில் மிக அதிக அளவாக 11 ஆயிரத்து 929 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் நாட்டில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 3 லட்சத்து 20 ஆயிரத்து 922 ஆக உயர்ந்து உள்ளது. இவர்களில் 1 லட்சத்து 49 ஆயிரத்து 348 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுவரை 1 லட்சத்து 62 ஆயிரத்து 379 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிப்புக்கு கடந்த 24 மணிநேரத்தில் 311 பேர் பலியாகி உள்ளனர். இதனை தொடர்ந்து கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 9 ஆயிரத்து 195 ஆக உயர்ந்து உள்ளது.

SCROLL FOR NEXT