ஐதராபாத்,
ஐதராபாத்தில் பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் 4 பேர், போலீசாரை தாக்கிவிட்டு தப்பி ஓடிய போது சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்த என்கவுண்ட்டரில் 2 போலீசார் காயமடைந்தனர். தற்காப்புக்காக குற்றவாளிகளை சுட்டதாக சைபராபாத் போலீஸ் கமிஷனர் விளக்கம் அளித்தார்.
போலீசாரின் நடவடிக்கைக்கு பொதுமக்கள் மத்தியில் பரவலாக வரவேற்பு உள்ள போதிலும் சில எதிர்க்கருத்துகளும் எழுந்துள்ளன.
இந்த நிலையில், என்கவுண்ட்டர் குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணையை துவங்கியுள்ளது. என்கவுண்ட்டர் நடைபெற்ற இடத்திற்கு சென்ற தேசிய மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர்கள், விசாரணை நடத்தினர். தொடர்ந்து, என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட 4 பேரின் உடல்கள் வைக்கப்பட்ட மருத்துவமனைக்கு சென்றும் விசாரணை நடத்தினர்.
முன்னதாக, என்கவுண்ட்டர் சம்பவம் குறித்து கவலை தெரிவித்த தேசிய மனித உரிமைகள் ஆணையம், இந்த சம்பவம் மிகவும் கவனமாக விசாரிக்கப்பட வேண்டிய ஒன்று எனவும் கூறியிருந்தது.