சென்னை,
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ரெயில்வே வாரியம் இந்தியா முழுவதும் இயங்கும் 508 பயணிகள் ரெயில்களை விரைவு ரெயில்களாக மாற்ற முடிவு செய்யப்பட்டு இருப்பது தெரிகிறது. அவ்வாறு விரைவுத் ரெயில்களாக மாற்றினால் பயணிகள் கட்டணம் இருமடங்கு உயர்த்தப்படும்.
பயணிகள் ரெயில்கள் விரைவு ரெயில்களாக மாற்றப்படுவதால், பெரிய ஊர்களில் மட்டுமே ரெயில்கள் நிற்கும். இதனால், அன்றாட வணிகத்திற்கும், தொழிலுக்கும் செல்பவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.எனவே, மக்களை கடுமையாக பாதிக்கின்ற நடவடிக்கைகளை ரெயில்வே துறை கைவிட வேண்டும்.
பயணிகள் ரெயில் போக்குவரத்தை அதிகப்படுத்த வேண்டும். குறிப்பாக, சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கும், சென்னையில் இருந்து கோவை பாலக்காடு வரையிலும், ஒரு மணி நேரத்திற்கு ஒரு பயணிகள் ரெயிலை இயக்குவதற்கு ரெயில்வே துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.