நெல்லை,
தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 234 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. இதையொட்டி த.வெ.க தலைவர் விஜய், தனது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் வகையில் பிரசாரம் மேற்கொள்கிறார்.
இந்த நிலையில், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள 22 சட்டமன்ற தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து தவெக தலைவர் விஜய் நாளை (புதன்கிழமை) பிரசாரம் செய்கிறார். காலை 10 மணி அளவில் பொதுக்கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக நெல்லை பாளையங்கோட்டையில் பொதுக்கூட்ட மேடை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இந்த நிலையில் த.வெ.க. நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் நெல்லைக்கு வந்தார். அவர் நெல்லை மாவட்டத்தில் கங்கைகொண்டான் மற்றும் ராஜகோபாலபுரம், கே.டி.சி. நகர் உள்ளிட்ட விஜய் பிரசாரம் மேற்கொள்வதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் செங்கோட்டையன் கூறியதாவது:- “நெல்லையில் விஜய் பரப்புரை செய்ய 51 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன; அனைத்து நிபந்தனைகளுக்கும். உட்பட்டு பொதுக்கூட்டம் நடத்தப்படும். விஜய் பிரசாரத்திற்கு மட்டும் கடுமையான விதிமுறைகள் விதிக்கப்படுகிறது. சென்னையைத் தவிர மற்ற இடங்களில் பிரசாரம் செய்ய பெரிய அளவில் பிரச்சினை இல்லை.
என்னுடைய தொகுதியான கோபியில் நல்ல தீர்ப்பை மக்கள் எனக்கு வழங்குவார்கள். 234 தொகுதிகளிலும் தவெக வேட்பாளர்கள் வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது. மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். விஜய் நாட்டை ஆள வேண்டும் என்பது மக்களின் ஆசை. அவர்களின் ஆசை கண்டிப்பாக வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.