சென்னை,
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 23-ந்தேதி நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் பிரசாரம், கூட்டணி, தொகுதி பங்கீடு உள்பட பல்வேறு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன.
அந்த வகையில் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை நடத்தி வரும் திமுக, மறுபுறம் தங்கள் கட்சி வேட்பாளர்கள் தேர்விலும் தீவிரம் காட்டி வருகிறது. அதன்படி திமுக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று 4-வது நாளாக நேர்காணல் செய்து வருகிறார்.
இந்த நிலையில் நாளை நடைபெற இருந்த திமுக வேட்பாளர்கள் நேர்காணல் 23-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழ்நாடு சட்டசபை பொதுத்தேர்தலுக்கு போட்டியிட விரும்பி விண்ணப்பித்தவர்களுக்கான நேர்காணல் ஏற்கனவே 21-ந்தேதி (சனிக்கிழமை) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த மாவட்டங்கள் ரமலான் பண்டிகையை முன்னிட்டு ஒத்திவைக்கப்பட்டு, 23-ந்தேதி (திங்கள்கிழமை) நடைபெறும் என்று அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.