அரசியல் களம்

எடப்பாடி பழனிசாமி விரக்தியின் உச்சத்தில் இருக்கிறார்: செந்தில் பாலாஜி

தி.மு.க. கூட்டணி 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் நிச்சயம் வெற்றி பெறும் என்று செந்தில் பாலாஜி கூறினார்.

கரூர்,

கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தேர்தல் பிரசாரத்தின்போது எதிர்க் கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, முதல்-அமைச்சரை ஒருமையில் பேசுவது குறித்து கேட்கிறீர்கள். எதிர்க்கட்சி தலைவர் முதல் 2-ம் கட்டத்தில் உள்ள மாவட்ட தலைவர்கள் வரை உள்ளவர்களுக்கு நாகரிகம் தெரியாது.

முதல்-அமைச்சர் பிரசாரத்தின்போது எந்த அளவுக்கு நாகரிகமாக தனது கருத்துகளை தெரிவித்து வருகிறார். எடப்பாடி பழனிசாமியை பொறுத்தவரை விரக்தியின் உச்சத்தில் இருப்பதாலும், தோல்வியை உணர்வதாலும் இந்த மாதிரியான கடுமையான வார்த்தைகளை தெரிவித்து வருகிறார். எந்த கட்சியின் தலைவர்கள் நல்லது செய்வார்கள் என்று மக்களுக்கு தெரியும்.

பா.ஜனதாவில் முன்னாள் மாநில தலைவருக்கு சீட் வழங்கப்படாதது குறித்து நான் கருத்து தெரிவிக்க முடியாது. எங்கள் கூட்டணியிலேயே ஒரு தொகுதிக்கு 60 பேர் வரை விருப்ப மனு அளித்திருந்தனர். ஆனால் ஒருவருக்குதான் சீட் வழங்க முடியும் என்பதால் மற்றவர்களுக்கு அடுத்த தேர்தல்களில் வாய்ப்புகள் கிடைக்கும்.

தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்து நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. அதன்படி வருகிற சட்டமன்ற பொதுத்தேர்தலிலும் தி.மு.க. கூட்டணி 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் நிச்சயம் வெற்றி பெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.