அரசியல் களம்

மதுரை பொதுக்கூட்டம் ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாகும்: பியூஸ் கோயல்

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமையும் என்று பிரதமர் மோடி கூறினார்.

சென்னை,

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதையொட்டி மதுரை மண்டேலா நகர் சுற்றுச்சாலை பகுதியில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரமாண்ட பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார்.

பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மத்திய மந்திரிகள் பியூஸ் கோயல், எல்.முருகன், பா.ஜனதா மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர்கள் அண்ணாமலை. தமிழிசை சவுந்தரராஜன், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், ஐ.ஜே.கே நிறுவனர் பாரிவேந்தர், தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன், புரட்சி பாரதம் பூவை ஜெகன் மூர்த்தி, தென்னிந்திய பார்வார்டு பிளாக் கட்சியின் நிறுவனர் திருமாறன் ஜி உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பலர் பங்கேற்றனர்.

பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பரபரப்பாக பேசினார். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமையும் என்று கூறியதுடன், ஊழல் செய்வதில் தி.மு.க. அமைச்சர்களிடையே போட்டா போட்டி நிலவுவதாக சாடினார்.

இந்த நிலையில், மதுரை பொதுக்கூட்டம் குறித்து தமிழக பாஜக பொறுப்பாளரும், மத்திய மந்திரியுமான பியூஸ் கோயல் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாகும். தமிழக வரலாற்றில் இதுவரை கண்டிராத வகையில், தொண்டர்களும் பொதுமக்களும் இவ்வளவு பெருந்திரளாகத் திரண்டு வந்திருந்தனர். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மீது அன்பையும் பாசத்தையும் பொழிந்த தமிழ்நாட்டு மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.