அரசியல் களம்

விலகி இருப்பவர்கள் நிச்சயமாக கூட்டணிக்கு வருவார்கள்: டிடிவி தினகரன் நம்பிக்கை

யாரோ ஒருசிலர் ஒதுங்கி இருப்பதால் ஒன்றும் நடக்காது என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.

மதுரை,

மதுரையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

வருகிற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தாம் போட்டியிட போவதில்லை. அதிமுகவும்- அமமுகவும் மேல்மட்டம் முதல் கீழ்மட்டம் வரை ஒற்றுமையாக உள்ளது. அமமுகவுக்கான தொகுதிகளை பாஜக மூலம் அதிமுகவுடன் பேசி நல்ல முறையில் நிறைவு செய்வோம். பிரிந்துள்ளவர்கள், தனித்துவிடப்பட்டவர்கள், விலகி இருப்பவர்கள் (ஓபிஎஸ், சசிகலா பெயரை குறிப்பிடாமல்) நிச்சயமாக தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வருவார்கள்.

யாரோ ஒருசிலர் ஒதுங்கி இருப்பதால் ஒன்றும் நடக்காது; ஒதுங்கி இருப்போர் எங்கள் பக்கம் வருவார்கள். தீய சக்தி தி.மு.க. ஆட்சியை வீழ்த்தி என்டிஏ கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு வருவார்கள். முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் தொண்டர்கள் 99.9 சதவீதம் பேர் தற்போது ஒன்றாக இணைந்துள்ளோம். தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் 40 தொகுதிகள் வரை கேட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.