செய்திகள்

ராசி மணல் அணை கட்டுமான பணியை தொடங்கக்கோரி விவசாயிகள் உண்ணாவிரதம்

ராசி மணல் அணை கட்டுமான பணியை தொடங்கக்கோரி தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் உண்ணாவிரதம் நடந்தது.

பென்னாகரம்,

ராசி மணல் அணை கட்டுமான பணியை உடனே தொடங்க வேண்டும். கர்நாடக மேகதாது அணை கட்டுமான பணியை தடுத்து நிறுத்திட மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் ஒகேனக்கல்லில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. தர்மபுரி மண்டல தலைவர் சின்னசாமி தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

இந்த உண்ணாவிரத போராட்டத்தில், ராசி மணல் அணை கட்டுமான பணியை உடனே தொடங்க வேண்டும். கர்நாடக மேகதாது அணை கட்டுமான பணியை தடுத்து நிறுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒகேனக்கல், ஊட்டமலை சாகுபடி நிலங்களுக்கு விவசாயிகளுக்கு 1998-ம் ஆண்டு பட்டா வழங்கியும் அடங்கலில் பதிவு செய்ய காலதாமதம் செய்வதை கண்டித்தும், ஒகேனக்கல்லில் பரிசல் ஓட்டும் தொழிலாளர்களுக்கு தடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்.

பரிசல் தொழிலாளர்கள், மீன்பிடிப்பவர்கள் விற்பனை செய்யும் பெண்களுக்கு கொடுக்கப்படும் நெருக்கடிகளையும், மிரட்டலையும் தடுத்து உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இந்த உண்ணாவிரத போராட்டத்தில் மாநில பொது செயலாளர் வெங்கடேசன், வேலூர் மாவட்ட செயலாளர் முல்லை, ஒகேனக்கல் நிர்வாகிகள் முத்தையன், கணேசன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். முன்னதாக ஒகேனக்கல் பஸ் நிலையத்தில் இருந்து சங்க சேர்ந்த நிர்வாகிகள் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் ஊர்வலமாக உண்ணாவிரத திடலுக்கு வந்தனர்.