திருவாரூர்,
நுகர்பொருள் வாணிப கழக ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். பணி வரன்முறை செய்ய வேண்டும். ஓய்வூதியம் வழங்க வேண்டும். ரேஷன் கடைகளில் அனைத்து பொருட்களையும் பொட்டலம் முறையிலும், சரியான எடையிலும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடை பணியாளர் சங்கத்தின் சார்பில் கடந்த 11-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.
3-வது நாள் வேலை நிறுத்த போராட்டத்தையொட்டி திருவாரூர் ரெயில் நிலையம் முன்பு ரேஷன் கடை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு மாவட்ட தலைவர் குணசீலன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஹரிஹரன், மாநில பொருளாளர் நெடுஞ்செழியன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் நிர்வாகிகள் வெங்கட்ராமன், சரவணன், முருகானந்தம், அறிவழகன், சண்முகசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். ரேஷன் கடை பணியாளர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தினால் அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் பணி பாதிக்கப்பட்டு உள்ளது.
இதனால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.