வாராக்கடன் பிரச்சினையால் நாட்டின் வங்கித்துறை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பொதுத்துறையைச் சேர்ந்த பல வங்கிகள் இதனால் கடும் நெருக்கடியில் சிக்கி உள்ளன. வாராக்கடனைப் பொறுத்தவரை பொதுத்துறை வங்கிகளுடன் ஒப்பிடும்போது தனியார் வங்கிகளுக்கு அதிக பாதிப்பு இல்லை என்று கூறப்படுகிறது. எனினும் கடன்களை மீட்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதால் இனி வரும் காலங்களில் பல பொதுத்துறை வங்கிகள் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், ஏப்ரல்-ஜூன் காலாண்டில் முன்னணி பொதுத்துறை வங்கிகளின் நிதி நிலை முடிவுகள் திருப்திகரமாக இல்லை என நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில், கடன் தகுதி தர நிர்ணய நிறுவனமான கிரிசில், அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் வங்கித் துறையின் மொத்த வாராக்கடன் அவை வழங்கிய மொத்த கடனில் 8-8.5 சதவீதமாக குறையும் என முன்னறிவிப்பு செய்துள்ளது. 2018 மார்ச் இறுதியில் அது 11.5 சதவீதம் என்ற அளவில் மிக அதிகமாக இருந்தது.