சிறப்புக் கட்டுரைகள்

கவலைக்குரிய ‘கல்லீரல்’

உலக அளவில் கல்லீரல் புற்றுநோய் பாதிப்புக்குள்ளாகி இறந்தவர்களின் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது 50 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது.

2017-ம் ஆண்டு இங்கிலாந்தில் கல்லீரல் புற்றுநோய்க்கு சுமார் 5700 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். 2007-ம் ஆண்டு இறப்பு வீதம் 3,200 ஆக இருந்திருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளாக கல்லீரல் புற்றுநோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இங்கிலாந்தில் உள்ள நியூகேஸில் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, கடந்த 10 ஆண்டுகளில் கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 60 சதவீதம் அதிகரித்துள்ளது. இது வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கக்கூடும். கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 37 சதவீதம் அதிகரித்துள்ளது என்பது தெரியவந்துள்ளது. உடல் எடை அதிகரித்ததன் காரணமாக 33 சதவீதம் பேர் கல்லீரல் புற்றுநோய் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். புகைப்பிடிக்கும் பழக்கத்தால் 20 சதவீதம் பேருக்கு கல்லீரல் புற்றுநோய் ஏற்பட்டிருக்கிறது.

உடல் பருமன், நீரிழிவு மற்றும் ஆல்கஹால் உடலில் சேருவது கல்லீரல் புற்றுநோய்க்கு காரணமாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகிறார்கள். இந்த புற்றுநோய் பாதிப்பில் இருந்து மக்களை காப்பாற்ற முடியும் என்றும், ஆனால் அதற்கு வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ள வேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்துகிறார்கள். நோயின் தாக்கம் அதிகரித்துவிட்டால் சிகிச்சையில் குணப்படுத்துவது கடினம் என்றும் சொல்கிறார்கள்.

SCROLL FOR NEXT