மும்பை
பாரத ரிசர்வ் வங்கியின் அன்னிய செலாவணி கையிருப்பு, மே 24-ந் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 199 கோடி டாலர் உயர்ந்து 41,999 கோடி டாலராக அதிகரித்து இருக்கிறது. மே 17-ந் தேதியுடன் நிறைவடைந்த முந்தைய வாரத்தில் அது 206 கோடி டாலர் சரிவடைந்து 41,800 கோடி டாலராக குறைந்து இருந்தது.
ரிசர்வ் வங்கியின் அன்னியச் செலாவணி கையிருப்பில் பவுண்டு, யூரோ, யென் போன்ற இதர நாட்டு செலாவணிகள், தங்கம், எஸ்.டீ.ஆர். மற்றும் பன்னாட்டு நிதியத்திடம் உள்ள இருப்பு நிதி ஆகியவை இடம் பெற்றுள்ளன. அன்னிய செலாவணி கையிருப்பு டாலரில் மறுமதிப்பீடு செய்யப்படுகிறது. எனவே டாலரின் வெளிமதிப்பில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளுக்கு ஏற்ப அன்னிய செலாவணி கையிருப்பு மதிப்பில் மாற்றம் ஏற்படுகிறது.
கணக்கீட்டுக் காலத்தில், ரிசர்வ் வங்கியின் கையிருப்பில் உள்ள இதர செலாவணிகளின் மதிப்பு 199 கோடி டாலர் அதிகரித்து 39,219 கோடி டாலராக இருக்கிறது. கையிருப்பில் உள்ள தங்கத்தின் மதிப்பு மாற்றம் எதுவுமின்றி 2,302 கோடி டாலராக உள்ளது. எஸ்.டீ.ஆர். மதிப்பு 8 லட்சம் டாலர் உயர்ந்து 145 கோடி டாலராக அதிகரித்து இருக்கிறது. பன்னாட்டு நிதியத்திடம் உள்ள இருப்பு நிதி 20 லட்சம் டாலர் குறைந்து 334 கோடி டாலராக உள்ளது.
2017 செப்டம்பர் 8-ந் தேதி ரிசர்வ் வங்கியின் அன்னிய செலாவணி கையிருப்பு முதல் முறையாக 40,000 கோடி டாலர் என்ற புதிய சாதனை அளவை எட்டியது. 2018 ஏப்ரல் 13-ந் தேதி அது 42,603 கோடி டாலராக வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்தது.