வாஷிங்டன்,
பூமியின் வளிமண்டலத்தை மார்ச் 28 ஆம் தேதி சூரிய புயல் தாக்க உள்ளது என்றும் அது பூமியின் வட துருவங்களில் வலுவான அரோராக்களை தூண்டும் என்று நாசா தெரிவித்திருந்தது.
இந்த அரிய வானியல் நிகழ்வு குறித்து, விண்வெளி வானிலை இயற்பியலாளர் தமிதா ஸ்கோவ் கூறிய தகவல்களை காண்போம்.
நாசா மற்றும் என் ஓ ஏ ஏ பரிந்துரைத்தபடி, பூமியின் வளிமண்டலத்தை சூரிய புயல் தாக்க உள்ளது.
சூரிய புயல் பூமியைத் தாக்கும் நேரம் பல மணிநேர வித்தியாசத்தை கொண்டுள்ளது.
என் ஓ ஏ ஏ தெரிவித்தபடி, இந்திய நேரப்படி மார்ச் 27 அன்று காலை 11:30 மணிக்கு சூரிய புயல் பூமியைத் தாக்கும் என்று கணிக்கப்பட்டிருந்தது. நாசாவால் கணிக்கப்பட்டிருந்த நேரத்தை விட 18 மணி நேரம் முன்கூட்டியே சூரிய புயல் நிகழ வாய்ப்புள்ளது என்று தெரிவித்திருந்தது.
இதன்மூலம், இது ஒரு வேகமான சூரிய புயல், இது நமது கிரகத்தை கடுமையாக தாக்கும் என்பது தெரிய வந்துள்ளது.
மேற்கண்ட இருவேறு நேர வித்தியாசம் இருந்தாலும், இதனால் அரோராக்கள் பூமியின் நடு அட்சரேகைகளை அடையும் என்பதில் மாற்றமில்லை.
இந்த நிகழ்வின் போது ஜிபிஎஸ் மற்றும் உயர் அதிர்வெண் ரேடியோ தகவல்தொடர்புகளில் குறைபாடுகள் ஏற்படலாம் என்று அவர் தெரிவித்தார்.
அரோராக்கள் என்பது என்ன?
பூமியின் காந்தப்புலமானது(காந்த சக்தி), சூரிய துகள்களுடன் தொடர்பு கொள்ளும்போது, பூமியின் வட மற்றும் தென் துருவங்களில் - வடக்கு வெளிச்சம் மற்றும் தெற்கு வெளிச்சம் ஏற்படும். அதனை அரோரா பொரியாலிஸ்(வடக்கு வெளிச்சம்) மற்றும் அரோரா ஆஸ்ட்ராலிஸ்(தெற்கு வெளிச்சம்) என அழைக்கின்றனர்.
இந்த நிலையில், சூரிய புயல் பூமியின் காந்தப்புலத்தைத் தாக்கும் போது, அது காந்தசக்தியில் ஒரு மறு இணைப்புக்கு வழிவகுக்கிறது. இதனால் ஒரு வெடி விபத்து போன்ற நிகழ்வு உண்டாகிறது.
இந்த நிகழ்வால், அணுக்களுக்கு கூடுதல் ஆற்றல் வழங்கப்படுகிறது. அந்த கூடுதல் ஆற்றல் ஒளியாக வெளியிடப்படுகிறது.
இதுவே வடக்கு வெளிச்சம் மற்றும் தெற்கு வெளிச்சம் ஏற்பட காரணமாக அமைந்துள்ளது.
இதனை குறித்த கூடுதல் ஆராய்ச்சியின் மூலம், சூரிய புயலால் தகவல் தொடர்பு சமிக்ஞைகள் மற்றும் மனித தொழில்நுட்பத்தில் ஏற்படும் பின்விளைவுகளை கணிக்கவும் குறைக்கவும் நாசாவால் முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட சூரிய புயல் ஏற்பட்டதால் என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்பது இனிமேல் தான் தெரியவரும்.