சிறப்புக் கட்டுரைகள்

சிலு சிலு ஒகேனக்கல் அருவி

ஒகேனக்கல் அருவி தர்மபுரியிலிருந்து 47 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

தர்மபுரியிலிருந்து 47 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது எழில் கொஞ்சும் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி. காவிரி நதியிலிருந்து உருவாகும் இது இந்தியாவின் தலை சிறந்த அருவிகளில் ஒன்று. மிகவும் வேகமாக நீர் இவ்வருவியில் இருந்து வருவதால் இதனை நயாகரா நீர்விழ்ச்சியுடன் ஒப்பிடுவர்.

கன்னட மொழியில் ஒகே என்றால் புகை என்றும் நக்கல் என்றல் கல் என்றும் பொருள்படும். ஒகேனக்கல் என்றால் புகை சூழ்ந்த கல் என்று அர்த்தம். உள்ளம் கொள்ளை கொள்ளும் இந்த நீர்வீழ்ச்சியை சுற்றி வர பரிசல்களில் சவாரி செய்யலாம். இந்த அருவியின் நீர் மேட்டூர் அணையை நோக்கி பாய்கிறது.

இவ்விடத்தை ஸ்டான்லி நீர்த்தேக்கம் என்றும் அழைக்கின்றனர். ஒகேனக்கல்லில் எண்ணெய் தடவி உடல் முழுவதும் மசாஜ் செய்து விட ஆட்கள் இருக்கிறார்கள். மசாஜ் முடிந்தவுடன் அருவி நீரில் குளித்தால் புத்துணர்ச்சியுடன் இருக்கும். ஒகேனக்கல்லில் ஆட்டுக்கல் மீன் குழம்பு மிகப் பிரபலம்.

மீன் வாங்கி கொடுத்து விட்டு அருவியில் குளித்து விட்டு வந்தால், அங்கே இருக்கும் பெண்கள் ஆட்டுக்கல்லில் மசாலா அரைத்து குழம்பு வைத்து சுடச்சுட மீன் வருவலுடன் தருகின்றனர். பசுமையான மலைகள், குளிர்ந்த அருவி, சிலுசிலுக்கும் காற்று, அருமையான மீன்குழம்பு இவையெல்லாம் வேண்டுமென்றால் ஒகேனக்கல்லுக்கு உடனே கிளம்புங்கள். முக்கிய ஊர்களிலிருந்து ஒகேனக்கல் எவ்வளவு தூரம் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

சென்னையிலிருந்து ஒகேனக்கல் - 345 கி.மீ

பெங்களூருலிருந்து ஒகேனக்கல் - 146 கி.மீ

சேலத்திலிருந்து ஒகேனக்கல் - 85 கி.மீ

கோவையிலிருந்து ஒகேனக்கல் - 217 கி.மீ