இளஞ்சிவப்பு மலர்கள் பூத்துக்குலுங்கும் மரங்கள் நிறைந்த தெருக்களை பார்த்தால் வெளிநாடுகள்தான் நம் நினைவுக்கு வரும். வித்தியாசமான, அழகழகான மலர்கள் மலர்வதற்கு ஏற்ற சீதோஷண நிலை அங்கு நிலவும். அதனால் அதுபோன்ற மரங்களையும், மலர்களையும் மற்ற நாடுகளில் பார்ப்பது அரிதானது. ஆனால் கர்நாடக மாநிலத்திலுள்ள பெங்களூரு மாநகரத்தில் நிலவும் சீதோஷண நிலை பல வகையான மரங்கள், அரிதான மலர் செடிகள் வளர்வதற்கு உகந்ததாக இருக்கிறது.
மற்ற பகுதிகளில் வளர்வதற்கு சிரமப்படும் தாவரங்கள் இங்கு சர்வ சாதாணமாக துளிர்விடும். தற்போது பெங்களூரு மாநகரத்தின் பல பகுதிகள் வசந்த காலத்தை வரவேற்கும் வகையில் இளஞ்சிவப்பு நிறத்தில் காட்சி அளிக்கின்றன. தபேபுயா ரோசியா என்று அழைக்கப்படும் மரங்கள் இந்த இளஞ்சிவப்பு பூக்களை மலர செய்கின்றன. பெங்களூருவின் எந்த பகுதிக்கு சென்றாலும் குறைந்த பட்சம் இரண்டு மரங்களை யாவது பார்க்க முடியும். சில இடங்களில் இளஞ்சிவப்பு நிறத்திற்கு பதிலாக மஞ்சள் நிறத்தில் பூக்கள் மலர்ந்து கொண்டிருக்கும்.
பெங்களூருவில் வசிக்கும் பலர் தங்களின் சுற்றுப்புறங்கள், முக்கிய சாலைகள், வீட்டு வளாகங்களில் இருக்கும் மரங்களில் மலர்ந்திருக்கும் வண்ணமயமான பூக் களின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள். அது பலருடைய கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.