முக்கியமாக காற்றில் கார்பன் மாசு மிகுந்திருப்பதே வெப்பம் உயர்ந்து கொண்டே செல்வதற்கும், இதர பிரச்சினைகளுக்கும் அடிப்படை காரணமாக இருக்கிறது. பெருகிவரும் தொழிற் சாலைகள், மின்சார நிறுவனங்கள், வாகனங்களின் புகை போன்றவையே மாசு விளைவிக்கும் முக்கிய காரணியாக உள்ளது. காற்றில் கலந்துள்ள கார்பன் மாசுகளை அகற்றுவது மிகப்பெரிய சவாலாக உள்ளது. நகர வளர்ச்சியால் காடுகள், தாவரங்களின் பெருக்கம் வெகுவாக குறைந்து வருவது கார்பன் மாசு கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பெருக காரணமாக உள்ளது.
தற்போது கார்பன் மாசுவை கட்டுப்படுத்த கனடாவின் வாட்டர்லூ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் எளிமையான வழி ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். அவர்கள் கார்பன்-டை-ஆக்சைடை உறிஞ்சிக் கொள்ளும் ஒருவகை பவுடரை உருவாக்கி இருக்கிறார்கள். பல்கலைக்கழகத்தின் வேதிப் பொறியியல் விஞ்ஞானி ஷாங்வெய் ஷென் மற்றும் குழுவினர் இந்த பவுடரை உருவாக்கி உள்ளனர்.
கார்பன்-டை-ஆக்சைடு வாயுவை 3 முறையில் அப்புறப் படுத்த உதவுகிறது இந்த பவுடர். உறிஞ்சுதல் முறை, வடிகட்டுதல் முறை, பிரித்து நீக்குதல் முறை ஆகிய வழிகளில் இதைச் செய்யலாம். அதிகமாக மாசு விளைவிக்கும் தொழிற்சாலைகள், மின்சார நிறுவனங்களில் இந்த பவுடரை பயன்படுத்து வதன் மூலம் வெகுவாக கார்பன் மாசுவை கட்டுப்படுத்த முடியும் என்கிறார் விஞ்ஞானி ஷாங் வெய்.
ஒருமுறை உறிஞ்சிய கார்பனை அது திரும்ப வெளியிடுவதில்லை என்பது இதன் நம்பகத்தன்மையை அதிகமாக்குகிறது. மேலும் இந்த பவுடர் துகள்கள் ஒரு மீட்டரில் 10 லட்சத்தில் ஒரு பங்கைவிட சிறிதாக இருப்பதால், மிக நுட்பமான இடத்திலும் உள்ள கார்பனை உறிஞ்சி அகற்ற பயன்படுத்த முடியும். அதனுடன் இதன் பயன் முடிவடைவதில்லை. மீண்டும் இந்த பவுடரை நீர் வடிகட்டுதல், ஆற்றல் சேமிப்பு கருவியாக பயன்படுத்த முடியும் என்பது இதன் சிறப்புகளாகும்.
பலவிதங்களில் பயன்படும் இந்த பவுடரின் தயாரிப்பு முறையை ரகசியமாக வைத்துள்ளனர். சுற்றுச்சூழலுக்கு நன்மை செய்யும் இந்த தயாரிப்பு விரைவில் பயன்பாட்டிற்கு வரட்டும்!