செய்திகள்

அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

அரசு போக்குவரத்து கழக திருச்சி மண்டல அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

திருச்சி,

போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும், கல்வி-சுகாதாரம் மற்றும் மின்வாரியம் போன்று போக்குவரத்து கழகத்திற்கும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும், வரவுக்கும்-செலவிற்குமான இடைப்பட்ட தொகையை அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும், தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்த ரூ.9 ஆயிரம் கோடியை உடனடியாக வழங்கிட வேண்டும்.

1.4.2003-க்கு பிறகு பணியில் சேர்ந்துள்ள அனை வரையும் அரசு பென்சன் திட்டத்தில் சேர்த்து கொள்ள வேண்டும், தொழிலாளர்கள் ஓய்வு பெற்ற அன்றே அனைத்து பணப் பலன்களையும் வழங்கிட வேண்டும், ஒப்பந்தப்படி 240 நாட்கள் பணி முடித்த அனைவரையும் பணி நிரந்தரம் செய்திட வேண்டும், அனைத்து போக்குவரத்து கிளைகளிலும் கேண்டீனை முறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக திருச்சி மண்டல அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

கோஷம்

திருச்சி மண்டல போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தொ.மு.ச. திருச்சி கண்டோன்மெண்ட் கிளை தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள் கருணாநிதி (சி.ஐ.டி.யு.), நேருதுரை (ஏ.ஐ.டி.யு.சி.), செல்வம் (எச்.எம்.எஸ்.), துரை (ஐ.என்.டி.யு.சி.), வேல்முருகன் (ஏ.எல்.எல்.எப்), தொ.மு.ச. மத்திய தொழிற்சங்க கவுன்சில் தலைவர் குணசேகரன், செயலாளர் சந்திரசேகரன் மற்றும் அப்பாவு, கனகசபை, மணிகண்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது. மேலும் ஆர்ப்பாட்டத்தின்போது நிர்வாகிகள் கூறுகையில்,அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களின் 14-வது ஊதிய பேச்சு வார்த்தை தொடங்க வலியுறுத்தி திருச்சி மண்டல தலைமை அலுவலகத்தில் வருகிற 10-ந் தேதி காலை 10 மணி முதல் காத்திருப்பு போராட்டம் நடத்துவோம் என்றனர்.

SCROLL FOR NEXT