தமிழக செய்திகள்

விவசாயிகளுக்கு விரைவில் உரிய இழப்பீடு தொகையை வழங்க வேண்டும்

மழையால் பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்து விரைவாக கணக்கெடுப்பு நடத்தி விவசாயிகளுக்கு விரைவில் உரிய இழப்பீடு தொகையை வழங்கவேண்டும் என்று கலெகடர் மகாபாரதி அறிவுறுத்தி உள்ளார்.

மழையால் பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்து விரைவாக கணக்கெடுப்பு நடத்தி விவசாயிகளுக்கு விரைவில் உரிய இழப்பீடு தொகையை வழங்கவேண்டும் என்று கலெகடர் மகாபாரதி அறிவுறுத்தி உள்ளார்.

ஆலோசனை கூட்டம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு துறை, வருவாய்த்துறை, நீர்வள ஆதாரத்துறை, போக்குவரத்து துறை, ஊரக வளர்ச்சி துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தகவல் தொழில்நுட்பத் துறை ஆகிய துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கலெக்டர் மகாபாரதி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பேசுகையில், சில மாதங்களுக்கு முன்பு எதிர்பாராத மழையின் காரணமாக சேதம் அடைந்த விவசாய நிலங்கள் குறிப்பாக நெற்பயிர், உளுந்து, பருப்பு பயிர்களின் சேதம் குறித்து கணக்கெடுக்கும் பணியினை கிராம நிர்வாக அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

இழப்பீடு தொகை

கணக்கெடுக்கும் பணியை விரைந்து முடித்தால் தான் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு வழங்கிய நிதியை உடனடியாக அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்க முடியும். மேலும், மாவட்டத்தில் ஜல் சக்தி அபியான் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும். போக்குவரத்து துறையின் சார்பில் குறிப்பாக ரயில்வே நிலம் எடுப்பு பணியை விரைந்து முடிக்க வேண்டும்.

ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்

ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் நடைபெற்று வரும் பணிகளை தரமாகவும் விரைவாகவும் குறிப்பிட்ட காலத்திற்குள் விரைந்து முடிக்க வேண்டும். வேளாண்மைத் துறையினர், தகவல் தொழில்நுட்பத் துறையினர் அந்தந்த துறைகளில் நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

தமிழக அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்களை விரைந்து முடிப்பதற்கு அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். மாவட்ட நிர்வாகத்திற்கு நற்பெயர் வாங்கி தர வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை இணை இயக்குனர் ஸ்ரீலேகா வேளாண்மை துறை மாவட்ட இணை இயக்குனர் சேகர் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.