தமிழக செய்திகள்

"வன்னியர்களுக்கான 10.5% சதவீத இட ஒதுக்கீடுக்கு தடை விதிக்க முடியாது" - சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

வன்னியர்களுக்கான 10.5% சதவீத இட ஒதுக்கீடுக்கு தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

சென்னை,

வன்னியர்களுக்கான 10.5% சதவீத இட ஒதுக்கீடு மசோதா அண்மையில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த இடஒதுக்கீடுக்கு தடை விதிக்க கோரி திண்டுக்கல்லை சேர்ந்த விஜயகுமார் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசியல் காரணங்களுக்காக சட்டம் இயற்றப்பட்டு உள்ளது என்றும் 10.5 % வன்னியர்களுக்கு கொடுத்தால் மற்ற சாதியினருக்கு பாதிப்பு ஏற்படும் என மனுதாரர் தரப்பில் வாதிக்கப்பட்டது.

அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜராகி, உரிய நடைமுறைகளை பின்பற்றியே சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. தேர்தல் ஆதாயத்திற்காக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது என்றார்.

இதையடுத்து, மனுதாரரின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், போதுமான ஆதாரங்கள் இல்லாமல் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என்றும் விஜயகுமார் தொடர்ந்த மனுவுக்கு தமிழக அரசு 8 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.