சென்னை,
தமிழக சுகாதார துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, இந்தியாவிலேயே ஒரு நாளைக்கு 1.50 லட்சத்திற்கு மேல் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்படுவது தமிழகத்தில் மட்டும்தான்.
தமிழகத்தில் இரண்டு தவணை தடுப்பூசிகளுமே செலுத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இதுவரை அரசு மருத்துவமனைகளில் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 2,26,01,212. கையிருப்பில் 8,26,560 தடுப்பூசிகள் உள்ளன. மத்திய அரசிடமிருந்து 3,30,000 தடுப்பூசிகள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர். அந்த வகையில் கையிருப்பில் 11.5 லட்சம் தடுப்பூசிகள் உள்ளன என கூறியுள்ளார்.
முதல்-அமைச்சரின் சி.எஸ்.ஆர். நிதியில் தடுப்பூசி செலுத்துதல் போன்ற பல்வேறு சிறப்பான நடவடிக்கைகளுக்கு பின், தனியார் மருத்துவமனைகளில் 20,38,680 தடுப்பூசிகளை மத்திய அரசிடமிருந்து வாங்கியிருக்கின்றனர். அதில் 16,34,959 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. தனியார் மருத்துவமனைகள் வசம் 4,03,721 கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன என்று அவர் கூறியுள்ளார்.