புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அரசு கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவர் மற்றும் வரலாற்று ஆய்வாளர் காளிதாஸ் மற்றும் ஆய்வு மாணவர்கள் விஜயலெட்சுமி, அபினேஷ் ஆகியோர் கொண்ட குழுவினர் அறந்தாங்கி அருகே நெய்வத்தளியில் உள்ள சிவன் கோவிலில் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் கோவில் கல்வெட்டுகளை ஆய்வு செய்தபோது 11-ம் நூற்றாண்டு பராக்கிரம பாண்டியன் கல்வெட்டை கண்டுபிடித்தனர்.
இதுகுறித்து வரலாற்று ஆய்வாளர் காளிதாஸ் கூறியதாவது:- இந்த கல்வெட்டு கோச்சடைய பன்மரான திருவாசகர் வட்தன் வீர பராக்கிரம பாண்டியனின் (1153) கல்வெட்டாகும். இதில் நெய்வேலி நாதர் கோவிலுக்கு இறையிலியாகக் கொடுத்த நிலத்தில் வீட்டுக்கு ஒரு ஆளும், ஒரு ஏரும் சென்று உழவு செய்து கொடுக்க வேண்டும். மீறுபவர்கள் சிறைத்தண்டனை பெறுவார்கள் என்ற செய்தி உள்ளது.
சிறை சென்றவரை மீட்க சிறைப் பணம் ஒன்று செலுத்த வேண்டும் என்ற செய்திகள் அந்த கல்வெட்டில் உள்ளது. அன்றைய காலத்தில் உழவுத் தொழிலை சிறப்படைய செய்ய மன்னர்கள் கடுமையான தண்டனை விதித்தனர். வீட்டுக்கு ஒரு ஆள் போருக்கு வரவேண்டும் என்பது போல், பராக்கிரம பாண்டியன் ஆணைப்படி வீட்டுக்கு ஒரு ஆள், ஒரு ஏர் என்ற முறையில் வேளாண்மை செய்து நாட்டை வளப்படுத்தி உள்ளனர். இது மாதிரியான பழைய பண்பாட்டுச் சின்னங்களை பாதுகாப்பது நம் அனைவரின் கடமை என்றார்.