தமிழக செய்திகள்

போதை மாத்திரை கடத்திய 2 பேருக்கு 12 ஆண்டு ஜெயில் - சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு

கொளத்தூரில் போதை மாத்திரை கடத்திய 2 பேருக்கு 12 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

கொளத்தூர் செந்தில்நகரில் கடந்த 2020-ம் ஆண்டு போதை பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் நடத்திய சோதனையில் 2 மோட்டார் சைக்கிளில் 2 கிலோ கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் கடத்தி செல்வது கண்டு பிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை கடத்திய கொளத்தூர் தேவிநகர் டீச்சர்ஸ் காலனியைச் சேர்ந்த வசந்தகுமார், கொளத்தூர் சந்தோஷ்நகர் நிஷாந்த் ராயன், டெல்லியைச் சேர்ந்த பாலச்சந்தர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு சென்னை போதைப்பொருள் கடத்தல் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் நீதிபதி திருமகள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. போலீசார் தரப்பில் சிறப்பு அரசு வக்கீல் கே.ஜே.சரவணன் ஆஜராகி வாதாடினார். வழக்கை விசாரித்த நீதிபதி, வசந்தகுமார் உள்ளிட்ட 3 பேர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு உள்ளதாக கூறி வசந்தகுமார், நிஷாந்த் ராயன் ஆகியோருக்கு தலா 12 ஆண்டு சிறை தண்டனை, தலா ரூ.2 லட்சம் அபராதமும், பாலச்சந்தருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை, ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

SCROLL FOR NEXT