சென்னை,
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, தமிழகத்தில் கொரோனா எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள மாவட்டங்களுக்கு கூடுதல் தடுப்பூசி வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.
கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரா போன்ற மாநிலங்களில் ஏற்படும் நோய் பாதிப்புகளுக்கு ஏற்ப மாநில எல்லை பகுதிகளில் கூடுதல் நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகத்தில் தற்போது கையிருப்பில் 12.5 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது. அதனால், தற்போது தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை என்று கூறியுள்ளார். உருமாறிய கொரோனோ வைரஸ் குறித்து கண்டறிய தமிழகத்தில் இரண்டு ஆய்வகங்கள் அமைக்கப்பட உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
இதுவரை 32 பேருக்கு டெல்டா வகை வைரஸ் பாதிப்பும், 10 பேருக்கு டெல்டா பிளஸ் பாதிப்பும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தொடர்ந்து அவர்களது உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.