சென்னை,
இந்தியாவில் கடந்த 16-ந்தேதி முதல் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கோவேக்சின், கோவிஷீல்டு என்ற 2 தடுப்பூசிகள் முதற்கட்டமாக சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு போடப்பட்டு வருகின்றன.
உலகிலேயே மிகப்பெரிய இந்த தடுப்பூசி திட்டம் 19 நாட்களாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் இதுவரை 1.57 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் இன்று முன்களப் பணியாளர்கள் உள்பட 11,396 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் கோவிஷீல்ட் தடுப்பூசி 8,894 பேருக்கு, கோவேக்சின் தடுப்பூசி 2,502 பேருக்கு போடப்பட்டுள்ளது. அந்தவகையில் 20 நாள்களில் தமிழகத்தில் மொத்தம் 1,57,046 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.