தூத்துக்குடி,
தூத்துக்குடி அருகே அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் புகுந்து, பெண் ஆசிரியையிடம் 16 சவரன் தங்கச் செயினை பறித்துச் சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி அருகிலுள்ள அத்திமரபட்டியில் மாநகராட்சி அரசு நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. 6, 7 மற்றும் 8-ம் வகுப்புகள் கொண்ட இப்பள்ளியில் தூத்துக்குடியைச் சேர்ந்த ரத்னா தலைமை ஆசிரியராகவும், புதிய துறைமுக ஊழியர் குடியிருப்பைச் சேர்ந்த சாந்தி உதவி ஆசிரியராகவும் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று மதிய நேரத்தில் ஆசிரியை சாந்தி கைகழுவுவதற்காக பள்ளி வளாகத்தில் உள்ள கழிப்பறை பகுதிக்குச் சென்றுள்ளார். அப்போது கழிப்பறைக்குள் மறைந்திருந்த மர்ம நபர் ஒருவர், திடீரெனப் பாய்ந்து வந்து ஆசிரியை சாந்தியின் கழுத்தில் இருந்த 16 சவரன் தங்க தாலிச் செயினைப் பறித்துக்கொண்டு தப்பியோடினான்.
தாலிச் செயினைப் பறித்த வேகத்தில் ஆசிரியை கீழே விழுந்து அலறியுள்ளார். அவரது கூச்சல் சத்தம் கேட்டு மற்றவர்கள் ஓடி வருவதற்குள், அந்த மர்ம நபர் கிழக்குத் திசையில் உள்ள வாழைத் தோட்டத்திற்குள் புகுந்து தப்பியோடிவிட்டான். பறிகொடுக்கப்பட்ட தங்க செயினின் மதிப்பு ரூ.20 லட்சத்திற்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த முத்தையாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தப்பியோடிய அந்த மர்ம நபரை பிடிக்க மோப்ப நாய் மற்றும் டிரோன் கேமராக்களின் உதவியுடன் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வலைவீசி தேடி வருகின்றனர். பட்டப்பகலில் அரசுப் பள்ளி வளாகத்திலேயே நடைபெற்ற இந்தத் துணிகரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.